அண்ணாமலையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும், அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை கோயில். இங்கு தீப திருவிழாவின்போது மலை மீது தீபம் ஏற்றுவது பிரசித்திபெற்ற ஒன்றாகும். தீப திருவிழாவின்போது அன்று ஒருநாள் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி நாடக்ளின்போது பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். திருவண்ணாமலையில், நால்வர் என்றழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பாடியுள்ளனர்.
இங்குள்ள மலையானது சிவபெருமானே என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
24 ஏக்கர் பரப்பளவில் 9 ராஜகோபுரங்கள் கொண்ட அண்ணாமலையார் கோயிலின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெகநாதனுக்கு காஞ்சி சிறுத்தைகள் என்ற பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, கோயில் இணை ஆணையர் ஜெகநாதன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரை அடுத்து அண்ணாமலையார் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.