டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு காலதாமதமாக வெளியிட புயல் பாதிப்பு தான் காரணமா.? இதெல்லாம் ஏற்கமுடியலை- அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவு முடிவு வெளியிட 10 மாதங்கள் தாமதம் ஆனதற்கு புயல் பாதிப்பு என கூறுவது ஏற்புடையது அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![Annamalai said that it is not acceptable to say that storm damage is the reason for the late release of TNPSC exam results KAK Annamalai said that it is not acceptable to say that storm damage is the reason for the late release of TNPSC exam results KAK](https://static-ai.asianetnews.com/images/01h2q3gftcvx8ngecdskgr186g/annamalai_363x203xt.jpg)
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு
டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இதனை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வு நடைபெற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் முடிவுகள் வெளியிடப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முடிவுகள், வரும் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப் போவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வு முடிவு- காலதாமதம் ஏன்.?
மேலும் ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முடிவுகள், வரும் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. மேலும், தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று, தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதமானதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறது. எனினும், அந்தக் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
காரணத்தை ஏற்க முடியவில்லை
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் வெளியீடு, பத்து மாதங்கள் கழித்து, டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலினால் தாமதமானது என்பது நியாயமான காரணமாகத் தெரியவில்லை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ள 2024 ஜனவரி 12 இறுதியானதாக இருக்கும் என்று நம்புகிறோம். இனி வரும் காலங்களில், இது போன்ற அவசியமற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்திக் கொள்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
TNPSC : ஜனவரி 12ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்.. போட்டித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!!