முக கவசத்தை கட்டாயமாக்குங்க..! குழந்தைகளை தாக்கும் காய்ச்சல்.. அரசுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை
தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும நிலையில் முக கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
![Annamalai has requested that face shields should be made mandatory as the fever is increasing in Tamil Nadu Annamalai has requested that face shields should be made mandatory as the fever is increasing in Tamil Nadu](https://static-gi.asianetnews.com/images/01gakkd66f6ff25qqcj3k9kxtn/thumb---2022-08-16t204213-258_363x203xt.jpg)
தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ" வகை வைரஸ் காய்ச்சலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்தக் காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதே நேரத்தில் தமிழகத்தில் இதுவரை 1,200 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல் பாதிப்பு இருந்தாலோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் என சுகாதாரத்துறை கேட்டு கொண்டிருந்தது.
முக கவசம் கட்டாயமாக்க வேண்டும்
இந்தநிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டுமென்று தமிழக பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு விடுமுறை..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..