B.E., B.Tech., படிப்பிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் விண்ணப்பம்… அண்ணா பல்கலைக்கழகம் தகவல்…
தமிழகத்தில் பொறியில் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் B.E., B.Tech., படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து, ஆன்லைன் விண்ணப்பத்தை நகல் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கடந்த 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த வார இறுதியில் அல்லது வரும் திங்கள்கிழமை முதல் தங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.