#Breaking : Anna university : ராகிங் பண்ண மாட்டன்னு சொன்னதான் அட்மிஷன்… அண்ணா பல்கலை. அதிரடி!!
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் என அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. ராகிங் பிரச்னை காரணமாக முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. கல்லூரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என அனைத்து பல்கலைக் கழகங்களும் கண்டிப்பாக கூறிய போதிலும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வேதனைக்குரியது.
ராகிங்கை கட்டுப்படுத்த பல்கலைக் கழகங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம். மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக் கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.