அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக இருந்துவரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சேலம் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த மற்றொரு அரசு விழாவில் பங்கேற்க அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள காரியமங்கலம் என்ற இடத்தை நெருங்கியபொழுது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக காரியமங்கலம் பகுதியில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உதவியால் காரியமங்கலத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவருக்கு செரிமான பிரச்சனை ஏற்பட்டு இருப்பது குறித்து தெரிய வந்தது. இருப்பினும் அவருக்கு நெஞ்சு வலி இருந்தமையால் இருதய சம்பந்தமான மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பெங்களூருவில் உள்ள நாராயணா இருதயாலயா என்ற மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்பொழுது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சிகிச்சை முடிந்து சுமார் 24 மணி நேரம் அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே பெங்களூருவில் உள்ள அந்த மருத்துவமனையில் அவர் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் ஒருவர் அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நேரத்தில் நெஞ்சு வழியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi VS Rahul Gandhi : பிரதமர் நரேந்திர மோடி VS ராகுல் காந்தி: சமூக ஊடகங்களின் கிங் யார்?
