விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் விசைத்தறிக்கு அரசு சார்பில் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இலவச மின்சாரத்தின் அளவு ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற பொது தேர்தலின் போது விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. இதை நிறைவேற்ற வேண்டும், மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என எங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்து இருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போதும் இந்த கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் வலியுறுத்தி இருந்தோம். இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர்களும் உறுதி அளித்திருந்தனர்.
அதன்படி விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று ஆயிரம் முதல் 1500 யூனிட் வரையிலான மின் கட்டணத்தில் 35 பைசாவும், 1500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தி பேசியதால் 12 பேர் கழுத்தறுத்து கொலை? வதந்தி பரப்பி உ.பி. இளைஞருக்கு எதிராக அதிரடி
இந்த அறிவிப்பு காரணமாக 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் பயனடைவார்கள். விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈஸ்வரன் எம்எல்ஏ ஆகியோருக்கு விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். மேலும் இலவச மின்சார அளவு உயர்த்தப்பட்டதற்கு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
