All the trade unions have one day symbolic hunger strike demanding to remove occupations ....

தூத்துக்குடி

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்கு அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இந்தப் போராட்டத்தில், "உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஓடைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். 

ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமல், அதற்கு வழங்கப்பட்ட மின்இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். 

கோவில்பட்டி இலட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து இரயில் நிலைய மேம்பாலம் வரையிலும், அரசு அறிவித்த அளவில் தரமான நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். 

நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்ற வேண்டும்.

கோவில்பட்டி தினசரி சந்தை செல்வதற்கு தரைப்பாலத்தில் இருந்து இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். 

அத்தைகொண்டான் கண்மாயில் கழிவுநீரை கலக்க விடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. 

இதில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்வம், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் பொன்ராஜ், டி.டி.யு.சி. மாவட்ட தலைவர் சங்கரன், 

ஐ.என்.டி.யு.சி துணை தலைவர் முருகன், அனைத்துலக சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம், 5–வது தூண் தலைவர் சங்கரலிங்கம், முருகன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கோபால் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.