ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்..புத்தகங்களை பார்த்து எழுதலாம்..AICTE அறிவிப்பு..
ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் தொடக்கம் முதல் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,580 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இறுதியாண்டு தேர்வினை தவிர அனைத்துக் கல்லூரி பருவ தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துவது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் அறிவித்திருந்தார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைகழகத்தின் இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் வகையில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.கல்லூரி பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், பாடவாரியாக தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றது. செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பதிவிறக்கம் செய்து தாள்களில் விடைகளை எழுதி மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுகளை எழுத உள்ளனர்.
அந்த வகையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆன்லைன் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.