தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்கு அதிகாரத்தைப் பறிப்பதாகவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கம் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் "வாக்கு திருட்டு - வாக்கு அதிகாரம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: வாக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பாஜகவும் சேர்ந்து பறித்து வருவதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதே கருத்தை வலியுறுத்தித்தான் ராகுல் காந்தி பீகாரில் பயணம் மேற்கொண்டார். இப்போது வாக்குகளைப் பறிப்பதற்கும், அடுத்ததாகக் குடியுரிமையைப் பறிப்பதற்கும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.

ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம்

வாக்குத் திருட்டைத் தடுக்கக் கோரி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்குத் தேர்தல் ஆணையம் பதில் சொல்லாவிட்டாலும், நாங்கள் கேட்ட பல தரவுகளை அவர்கள் அழித்துவிட்டனர். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நான் எப்போதும் காங்கிரஸின் குரலாகவே பேசுகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி திமுகவுக்காகச் செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பாஜக திட்டமிட்டு உருவாக்குகிறது. 

மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர் பிரச்சனைக்காகவும் திமுக அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம். இப்படி மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்

பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு கூட்டணி. மக்கள் எதிர்ப்பைப் பார்த்துவிட்டுத்தான் டிடிவி தினகரன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக நான்கு அணிகளாக உடைந்ததற்கும், பாமகவில் தற்போது நிலவும் பிரச்சனைக்கும் பாஜகதான் காரணம். அவர்கள் 'இந்தியா' கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இல்லை

யார் ஒன்றாகச் சேர்ந்தாலும் 'இந்தியா' கூட்டணிக்கு எந்தப் பாதகமும் கிடையாது. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால்கூட, வேறு ஒருவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிச்சாமி சென்று நிற்கும் நிலைதான் உருவாகும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது என்றார்.