குன்னூரில் புரோட்டின் பவுடர் எடுத்த பள்ளி மாணவன் உடல் அலர்ஜியால் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அதிமுகவைச் சேர்ந்தவர். தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இவரது இளைய மகன் ராஜேஷ் கண்ணா கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 31-ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவனை கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்ந்லையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

புரோட்டின் பவுடர்

இதனிடையே உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடர் காரணத்தால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து டிஎஸ்பி கூறுகையில் புகாரின் அடிப்படையில், தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

உடலில் தோல் அலர்ஜி

புரோட்டின் பயன்படுத்தியதால் தான், உடலில் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் விசாரிக்கப்படும். இந்த புரோட்டின் எடுத்த மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா அல்லது இவர் கூடுதலாக எடுத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜிம்மில் கொடுத்த புரோட்டின் சாப்பிட்டதால் அலர்ஜி எற்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.