விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்…
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில், விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஔரித்திடலில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கியது.
இந்தப் போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் சிவசாமி, ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் தமீம் அன்சாரி, நாகை ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி இதில் கலந்து கொண்டார்.
இந்தப் போராட்டத்தில், “வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்.
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் முன்னாள் எம்.பி. செல்வராசு நன்றித் தெரிவித்தார்.