ஜுன் 7 ஆம் தேதி வரைதான் …. அதுக்கப்புறம் அடிக்கும் பாருங்க ஒரு மழை… சும்மா வெளுத்து வாங்கப்போகுது!!
வரும் ஜுன் 7 ஆம் தேதிக்குப் பிறகு வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் உள்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஜுன் மாதம் தொடங்குவதற்கு முன்பே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக் காற்றால் ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் மழைப் பொழிவு அதிகமாவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
முதல் வாரத்தில் தென்னிந்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 2-வது வாரத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை காரணமாக 2-வது வாரத்தில் வெப்பநிலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்கு மேல் 11-ம் தேதிக்குள், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்ததாழ்வு நிலையால் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.