பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. முதற்கட்டமாக 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்று, முதற்கட்டமாக 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காணொளி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு அளித்த வாக்குறுதிகளைச் செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாகச் செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு முக்கிய வாக்குறுதிகள்

பணி நிரந்தரம்: முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்களும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப படிப்படியாக நிரந்தரப் பணி பெறுவார்கள்.

ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: நிரந்தரப் பணியாளர்களைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கொரோனா காலப் பணியாளர்கள்: கொரோனா காலத்தில் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட 724 செவிலியர்களும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் இதுவரை 4,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 1,693 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர்" என்று சுட்டிக்காட்டினார்.

அரசுக்கும் செவிலியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த இணக்கமான சூழல், அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டை மேலும் சீராக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.