“வரும்… அனா… வராது…” அந்தமான் அருகே காற்றழுத்தம் - தென் தமிழகத்தில் 3 நாள் மழை
'தமிழகத்தில், இன்று முதல், 3 நாட்களுக்கு, வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என வானிலை அதிகாரி தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான, 'வர்தா' புயல், கடந்த 12ம் தேதி சென்னையில் கரையை கடந்தது. அப்போது வீசிய சூறாவளி காற்றில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மரங்கள் வேரோடு விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த, 12 நாட்களாக, வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை.
இந்நிலையில், வங்க கடலுக்கு தென் கிழக்கில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, வலுப்பெற்று புயலாக மாறுமா அல்லது மழையை மட்டும் கொடுக்குமா என கண்காணித்து வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெறுவதற்கான சூழல் தற்போது தெரியவில்லை; கண்காணித்து வருகிறோம். காற்று வலுவாக இல்லாததால், காற்றழுத்த தாழ்வு நிலை, உடனடியாக வலுப்பெற வாய்ப்பில்லை.
இன்று முதல், 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே, தமிழகத்தில் நிலவும். சில இடங்களில், லேசான மழை பெய்யலாம். பின், காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதை பொறுத்து, தமிழகத்திற்கு மழை கிடைக்குமா என்பதை கணிக்க முடியும். இந்த தாழ்வு நிலை வலுப்பெற்றாலும், தென் கடலோர மாவட்டங்களுக்கு மட்டும், 3 நாட்கள் கழித்து, லேசான மழை கிடைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.