actor vijay film mercel released today in various theatres fans enjoyed well
விஜய் ரசிகர்கள் எல்லாம் தீபாவளி தீபாவளி என்று குதூகலமாய்க் காத்திருந்த அந்த தீபாவளியும் இன்று இனிதே வந்துவிட்டது. பலவித தடைகளையும் தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி ரிலீஸாக புதன்கிழமை இன்று வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் மெர்சல் இன்று திரையிடப்பட்டது.

முன்னதாக, மெர்சல் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை, கேளிக்கை வரி காரணமாக இருந்த சிக்கல், படத்தின் பெயர் சூட்டியதில் இருந்த பிரச்னை, நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு என பலவித கரைச்சல்களை சந்தித்தது மெர்சல்!
கேளிக்கை வரி கழுத்தை நெரித்த போது, முதல்வரிடம் ஓடினார் விஜய். கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது ஒரு நிம்மதியை அளித்தது. அதற்கு நன்றி தெரிவிக்க, அக்.15 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே ஓடிச் சென்று நன்றி தெரிவித்தார் விஜய்!
தொடர்ந்து, விலங்குகள் நல வாரியம் மெர்சலுக்கு அனுமதி அளிக்க, தடைகளைக் கடந்து தியேட்ட்டருக்கு வந்துவிட்டது மெர்சல். இனி, அது ரசிகர்களின் நெஞ்சங்களைக் கடந்து வெற்றி பெற வேண்டும்.
வருமா வராதா என்ற இழுபறிகளைக் கடந்து, பல்வேறு சிக்கல்களைத் தாண்டி மெர்சல் இன்று திரைக்கு வந்துள்ளதால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விடிய விடிய தியேட்டர்களின் முன் காத்திருந்து இன்று காலையில் தீபாவளி முதல் காட்சியைப் பார்த்து ரசித்தனர். காலை 7 மணி முதல் தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் தீபாவளீயை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
