கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில், சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்ததால், அவருக்கு அரசு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. எனவே, முறைகேட்டின் மூலம் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என கூறப்பட்டு இருந்த்து.

இந்த வழக்கை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது சைதை துரைசாமி ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டார். இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலினிடம், சைதை துரைசாமியின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். ஏற்கனவே, 2 முறை மு.க.ஸ்டாலின் குறுக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார். 3வது முறையாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் சைதை துரைசாமியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, எழுப்பப்பட்ட கேள்விகளும், பதில்களும்:-

வழக்கறிஞர்:– கொளத்தூர் தொகுதியில் 203 வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதா? 18வது சுற்றின் முடிவில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தீர்களா?

ஸ்டாலின்:– ஆமாம்.

வழக்கறிஞர்:– தெருமுனைக் கூட்டம் நடத்தினீர்களா?

ஸ்டாலின்:– அதுகுறித்து ஞாபகம் இல்லை. ஆனால் நடந்திருக்க வாய்ப்புண்டு.

வழக்கறிஞர்:– வீதி வீதி, வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்தீர்களா?

ஸ்டாலின்:– குறிப்பிட்ட வீதிகளில் மட்டுமே சென்றேன். வீடு வீடாக செல்லவில்லை.

வழக்கறிஞர்:– தேர்தலின் போது ஒட்டுமொத்த செலவுகளை செய்தது தி.மு.க.வா? அல்லது வேறு யார் மூலமாவா?.

ஸ்டாலின்:– செலவுகளை செய்ய கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டார். அவர் குறித்து தற்போது ஞாபகமில்லை.

வழக்கறிஞர்:– தேர்தலில் பயன்படுத்திய வாகனம் யாருடையது?

பதில்:– அது என் மகனுடைய வாகனம்.

கேள்வி:– ஜீப் பயன்படுத்தினீர்களா? அது உங்களுடையதா?

பதில்:– ஆமாம் பயன்படுத்தினேன். அது நண்பருடையது.

கேள்வி:– திராவிடர் கழக தலைவர் வீரமணி உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாரா?

பதில்:– ஆம். பிரசாரம் செய்தார்.

கேள்வி:– தேர்தலின் போது உறவினர்கள், ஏஜெண்டுகள் பிரசாரம் செய்த செலவை தாக்கல் செய்துள்ளீர்களா?

பதில்:– ஆமாம் தாக்கல் செய்துள்ளேன்.

நடிகர் வடிவேலு

கேள்வி:– சுப.வி என்ற சுப.வீரபாண்டியன் உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாரா?

பதில்:– ஆம்.

கேள்வி:– கொளத்தூர் தொகுதியில் உங்கள் மனைவி துர்கா என்ற சாந்தா ஸ்டாலின் பிரசாரம் செய்தாரா?

பதில்:– ஆமாம்.

கேள்வி:– கொளத்தூர் தொகுதியில் ரூ.1 கோடியே 18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

பதில்:– அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

கேள்வி:– உங்களுக்காக நடிகர் வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டாரா?

பதில்:– ஆமாம். பிரசாரம் செய்தார்.

கேள்வி:– தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் வடிவேலுக்கு, உங்கள் கட்சியின் நிர்வாகி வி.சி.பாபு பணம் கொடுத்தாரா?

பதில்:– இல்லை

தள்ளிவைப்பு

கேள்வி:– கொளத்தூர் தொகுதியில் உள்ள ஈஸ்வரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ சிடி–யை பார்த்தீர்களா?

பதில்:– இல்லை.

இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது, பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.