துப்பாக்கியுடன் பிடிபட்ட துணை நடிகர்...!!! - வைரத்தை கொள்ளையடித்த 7 பேர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் கேரள வைர வியாபாரி சூரஜ் என்பவரை துப்பாக்கி முனையில் மிரட்டி வைரத்தை கொள்ளையடித்த துணை நடிகர் ஷியாம் சுந்தர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்த வைர வியாபாரி சூரஜ். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் அவரிடம் இருந்து வைரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சூரஜ் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சென்னை வடபழனியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிடிபட்டவர் துறைமுகம் படத்தில் துணை நடிகராக நடித்த ஷியாம் சுந்தர் என்பதும், அவரிடம் இருந்து சிறிய துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளா வைர வியாபாரியிடம் 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ஷியாம் சுந்தர், அமுதன், ஜெகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.