நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை வழக்கு – ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...
நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடை பற்றிய வழக்கு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில்33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் புகார் மனு அளித்திருந்தார்.
மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதைதொடர்ந்து இதுகுறித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.
மேலும் நீதிபதிகள், ''நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவில்லை என்று ஆய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கைக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பு குறித்தது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.