கிட்னி திருட்டு முறைகேடு நடந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடியில் ஈடுபட்ட புரோக்கர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
Tamil Nadu kidney theft scam : தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நேரம் இல்லாத நேரத்தில் கிட்னி திருட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டதாகவும், அரசின் குழு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்ததாகவும் கூறினார்.
கிட்னி திருட்டு- சட்டசபையில் விவாதம்
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டதாக கூறிய அவர், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளதாக கூறிய அவர், 2017-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர் என்றும், விசாரணை மேற்கொண்ட சுகாதாரத் துறை குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கிய நிலையில் பச்சமின்றி பாகுபாடும் காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 புரோக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க ப்பட்டுள்ளதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்றும், அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுவதோடு, கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
