- Home
- Tamil Nadu News
- TN Diwali Bonus: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட்நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
TN Diwali Bonus: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட்நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசு, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அறிவித்துள்ளது. லாபம் ஈட்டும் சங்கங்களுக்கு 20% வரையிலும், மற்ற சங்கங்களுக்கு 10% வரையிலும் போனஸ் வழங்கப்படும்.

தமிழக அரசு
தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அடுத்தடுத்து தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025-2026-இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
கூட்டுறவு சங்க ஊழியர்கள்
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ்
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ. 44 கோடியே 11 இலட்சம் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவதையும் உறுதிசெய்திட வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.