தமிழகத்தில் பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக பஞ்சு விலை ஏற்முகத்தில் செல்கிறது. பஞ்சின் விலை உயர்ந்து வருவதால் பஞ்சாலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். பஞ்சாலைகளுக்கு வாங்கப்படும் 356 எடை கொண்ட ஒரு கேண்டி பஞ்சு ரூ.86,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.43,000க்கு விற்பனையான ஒரு கேண்டி பஞ்சு தற்போது ரூ.86,000க்கு விற்பனையாவதால் பஞ்சாலை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை எனில் நூல் விலை ஏறுவதுடன் பின்னலாடை, காடா துணி உற்பத்தி விலையும் அதிகரிக்கும் எனவும் பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ததற்காக ஜவுளித்துறையிடமிருந்து பாராட்டையும், நன்றியையும் பெற்றுக்கொள்ளும் தமிழக முதல்வர் தமிழகத்தில் பஞ்சு விளைச்சலை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீவிர பருத்தி சாகுபடி திட்டத்தை துவக்க வேண்டும். புதுரகங்களை புகுத்த வேண்டும். பருத்தியால் விவசாயிகளுக்கு இலாபம் அதிகம்.காய்கறிகளைப்போல் கெட்டுப்போகாது. தமிழகத்திலுள்ள பல்வேறு ஜவுளிசார்ந்த தொழிற்சாலைகளுக்கு 1 கோடியே 10 இலட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படுகிறது.

ஆனால் விளைச்சலோ 4 முதல் 5 இலட்சம் பேல்கள் மட்டுமே. இதனால் பஞ்சுத்தேவைக்காக ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஜவுளித்துறையினர் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக இருந்த கொங்குமண்டலம் இன்று பருத்தி விளைச்சல் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தின் சுயசார்பை ஊக்குவிக்க, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பஞ்சு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை, காய்ப்புழு போன்றவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் நிரந்தரத்தீர்வைக் கொடுத்து, பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
