அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டையை இணைக்கும் சிறப்பு முகாம் : நாளை முதல் டிசம்பா் 2 வரை நடக்கிறது
அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்வதற்காக வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு வரும் 28 நவம்பர் முதல் 2 டிசம்பர் வரை ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வங்கிகளின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், ஒவ்வொரு வங்கி கிளையிலும் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதில், வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.