Asianet News TamilAsianet News Tamil

ஆண் வேடமிட்டு கல்லூரி பேராசிரியரின் மனைவியிடம் சங்கிலி பறிக்க முயன்ற எதிர்வீட்டு பெண் கைது...

A woman arrested for attempting to chain snatch from college professor wife
A woman arrested for attempting to chain snatch from college professor wife
Author
First Published Mar 12, 2018, 10:39 AM IST


திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஆண் வேடமிட்டு கல்லூரி பேராசிரியரின் மனைவியிடம் 4 சவரன் சங்கிலி பறிக்க முயன்ற எதிர்வீட்டு பெண்ணை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை காந்திமதி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி (30). 

மாலதி நேற்று அதிகாலை 5.15 மணியளவில் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சட்டை, பேண்ட் அணிந்தும், தலையில் தொப்பி அணிந்து கொண்டும் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் மாலதியின் கழுத்தில் இருந்த 4 சவரன் சங்கிலியை பறிக்க முயன்றார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாலதி உடனடியாக சுதாரித்துக் கொண்டு சங்கிலியை தனது கைகளால் இறுகப் பற்றிக் கொண்டார். பின்னர், “திருடன் திருடன்“ என்று அலறினார். 

இந்த சத்தத்தைக் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த மர்மநபர் மாலதியின் கையை உதறிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவத்தில் சங்கிலி பாதியாக அறுந்து மாலதியின் கையில் பாதி சங்கிலியும், சாலையில் பாதி சங்கிலியும் கிடந்தது.

இதுபற்றி பேட்டை காவல் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். "தன்னிடம் சங்கிலி பறித்தவர் பெண் தான் என்றும், அநேகமாக தன்னுடைய வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ஜோதியின் மனைவி மாடத்தி (26) என்பவராக இருக்கலாம்" என்றும் அந்த புகாரி தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் காவலாளர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். புகாரில் மாலதி அடையாளமாக கூறிய ஆடைகள், அங்குள்ள பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரில் நனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் வலுத்த காவலாளார்கள், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில், மாலதியிடம் சங்கிலி பறிக்க முயன்றது மாடத்தி தான் என்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து மாடத்தியை கைது செய்தனர்.

கல்லூரி பேராசிரியரின் மனைவியிடம், ஆண் வேடமிட்டு எதிர்வீட்டு பெண் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios