பூட்டிய அறைக்குள் மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்...! மாணவி பரபரப்பு புகார்...!
மாணவிகளை பாலியல் பேரத்துக்கு அழைத்தது தொடர்பாக உதவி பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வரும் இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் முதலாம் ஆண்டு உளவியல் படித்து வந்தார். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி அரிதா படிப்பை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி விடுதியில் உடன் இருந்த மாணவிக்கு இரவு நேரத்தின்போது உடல்நிலை மோசமாகியது. இதனால், அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம், அரிதா கேட்டுள்ளார்.
அதற்கு, விடுதி காப்பாளர் பிரேமா, மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்துள்ளார். மேலும், விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடரந்து விடுதியின் தலைமை காப்பாளரான தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் அரிதாவை வகுப்பறையில் மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், வகுப்பறையின் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
துறைத் தலைவரான வேலாயுதம், தனது அறைக்கு மாணவி அரிதாவை அழைத்து, அறையினை பூட்டி ஆபாசமாக தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் அரிதா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மாணவியின் புகாரை அவர்கள் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா, தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் ஆகியோரிடம் அரிதா புகார் கொடுத்துள்ளார்.
விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைக்கழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.
மாணவி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும என வடவள்ளி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.