தென்காசி அருகே திடீர் நிலநடுக்கம்…. பீதியில் வீதிகளுக்கு ஓடிவந்த பொதுமக்கள் !!
தென்காசி மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை தொடங்கி நெல்லை வழியாக துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை வரையிலும் பூமியின் அடுக்குகளில் பிளவு இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களால் நிலஅதிர்வு சுமார் 2 ரிக்டர் அளவுக்கு ஏற்படுகிறது
கடந்த 2005ம் ஆண்டில் செங்கோட்டை மேக்கரையை அடுத்த அடவிநயினார் அணை அருகே நிலஅதிர்வு ஏற்பட்டது. பூமியில் பிளவுகளும் ஏற்பட்டன. சுரண்டை அருகே இத்தகைய நிலஅதிர்வால் இரவில் மின்கம்பம்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு 9:00 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அச்சன்புதுார், மேக்கரை மற்றும் கேரளாவில் ஆரியங்காவு ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
செங்கோட்டை பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. ஏதோ பாதிப்பு ஏற்படுகிறது என உணர்ந்த மக்கள் அச்சத்தில் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வீதிகளிலேயே இருந்த பொது மக்கள் பின்னர் வீடுகளுக்குள் சென்றனர்.இந்த சிறிய அளவிலான நிலநடுக்கத்தால் பொது மக்களுக்கு எந் பாதிப்புமில்லை.