பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததா.? துர்நாற்றம் வீசியது ஏன்.? குடிநீர் தொட்டியை இடிக்க காரணம் என்ன.?
பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த புகாரை மறுத்த அவர், அழுகிய முட்டை ஓட்டால் துர்நாற்றம் வீசியதாக தெரிவித்துள்ளார்.
![A school drinking tank in Kancheepuram was demolished after complaints of faecal contamination KAK A school drinking tank in Kancheepuram was demolished after complaints of faecal contamination KAK](https://static-ai.asianetnews.com/images/01hftjsxqsmwzz8jy74b8cre4g/whatsapp-image-2023-11-22-at-9-25-28-am_363x203xt.jpg)
குடிநீர் தொட்டியில் மலம்.?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதையடுத்து மலம் கலக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். மேலும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி சம்பவத்தை ஒப்பிட்டும் கருத்து கூறினர்.
மறுப்பு தெரிவித்த ஆட்சியர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சமையலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றச்சாட்டை மறுத்தார். மேலும்க குடிநீர் தொட்டியில் முட்டை கூடு கிடந்ததாக தெரிவித்தார். அழுகிய முட்டையை காகம் போன்ற பறவைகளை போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்
இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயங்கி வந்த நிலையில், அந்த குடிநீர் தொட்டியை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜேசிபி வாகனம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே பள்ளி வளாகத்தில் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை பராமரித்து பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அன்று வேங்கை வயல்... இன்று திருவந்தவார்... காஞ்சிபுரம் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த அவலம்!