திருவள்ளூர் மாணவி உடற்கூராய்வு வீடியோ பதிவுடன் தொடங்கியது...! சரளா மரணத்திற்கு காரணம் என்ன..?
திருவள்ளூரில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளி விடுதியில் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடற்கூராய்வு அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருவள்ளூரில் மற்றொரு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் உள்ள 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த பூசனம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (வயது 17) என்பவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளியில் உள்ள விடுதியில் மாணவிகளோடு சரளா பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காலை உணவு சாப்பிடுவதற்காக மற்ற மாணவிகள் உணவு விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது சரளா மட்டும் உணவு அருந்த வரவில்லை, இதனால் மற்ற மாணவிகள் சரளாவை தேடிச்சென்றனர். அப்போது முதல் மாடியில் உள்ள விடுதி அறையில் சரளா தூக்கிட்ட நிலையில் உடல் இருந்துள்ளது. இந்த காட்சிகளை பார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்துள்ளனர்.
“நீட் தேர்வு தோல்வியால் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை” .. மீண்டும் உளறிக்கொட்டிய மாஜி அமைச்சர்.!
இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியப்படுத்பதப்பட்ட நிலையில், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்திலும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இந்தநிலையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உடற்கூறு ஆய்வின்போது சிபிசிஐடி அதிகாரிகளும் உடன் உள்ளனர். மாணவியின் அண்ணன் சரவணன் மாணவியின் உடலை அடையாளம் காட்டிய நிலையில் அவர் முன்னிலையில் பிரேத பரிசோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் உடற்கூராய்வின் போது வீடியோ பதிவையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல் வன்முறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பள்ளி மற்றும் பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனைக்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்