போலி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தவர் குண்டுகட்டாக கைது...
மதுரை
மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு போலி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்தவரை காவலாளர்கள் குண்டுகட்டாக கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் இசக்கிதுரை (22). இவர் மதுரை மாவட்டம், கோச்சடையில் உள்ள பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகத்திற்கு தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக நேற்று வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை உதவி பாஸ்போர்ட் அதிகாரி கலைவாணி ஆய்வு செய்தார். அப்போது அவரது பாஸ்போர்ட் போலியானது என்பதும், போலி ஆவணங்கள் மூலம் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள் மூன்று பேருடன் சேர்ந்து இந்த பாஸ்போர்ட்டை தயாரித்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் கலைவாணி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் இசக்கிதுரையை காவலாளர்கள் கைது செய்தனர். அவரது போலி பாஸ்போர்ட்டையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்டுக்கு உதவிய டிராவல்ஸ் ஊழியர்கள் மூன்று பேரையும் காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.