கொடநாடு கொலைவழக்கில் முக்கியத் திருப்பம் விபத்தில் சிக்கிய சாயனிடம் வாக்குமூலம்
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த கொடநாடு கொலை வழக்கில் தேடப்படும் சாயனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது மரணம் தற்செயலானாதா அல்லது திட்டமிடப்பட்டதா என்ற விவாதம் நடைபெற்று வந்த நிலையில், தேடப்படும் மற்றொரு நபரான சாயன் என்பவரும் விபத்தில் சிக்கினார்.
கோவையில் இருந்து தனது மனைவியுடன் கேரளா தப்பிச் செல்ல முயன்ற போது இவர்கள் சென்ற வாகனம் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் சாயனின் மனைவி வினுப்பிரியா, 5 வயது குழந்தை ஆகிய இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய சாயன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டார். இதற்கிடையே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார்.