இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கன மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்
இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இரவு முழுவதும் நீடித்த கன மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்தது. அந்த வகையில், கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் இடி மின்னலோடு மழையானது வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தேங்கி நின்றது. இரவு முழுவதும் பெய்த மழையானது காலை நேரத்திலும் நீடித்தது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர் கன மழை காரணமாக 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். இதே போல வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்பெ. குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
காலாண்டு விடுமுறையில் அதிரடி மாற்றம்.. எல்லையில்லா மகிழ்ச்சியில் மாணவர்கள் - முழு விவரம்!