கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 90 நாட்களுக்கு பிறகு 18 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டு தங்களது உறவிர்கள், நண்பர்களை இழந்ததும் மட்டுமில்லாமல் வாழ்வாதரத்தை இழந்து வேதனையில் தவித்து வந்தனர். தற்போது தான் அந்த பாதிப்பில் இருந்து சற்று திரும்பி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 90 நாட்களாக உயிரிழப்பு ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 18 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்க்கு 25 என்ற விகிதத்தில் பதிவாகி வந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 476 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 1938 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

90 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு
தஞ்சையை சேர்ந்த 18 வயது மாணவி கடும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த போது கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது தெரியவந்துள்ளது. நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி இறப்பிற்கான காரணத்தை விரிவாக ஆய்வு செய்ய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இரட்டை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையிலும் அந்த மாணவிக்கு உப நோய் எதுவும் இல்லாத போது எப்படி உயிரிழந்தார் என மரபணு பரிசோதைக்கு அனுப்பப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 38 ஆயிரத்து 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் செவ்வாய் கிழமையன்று 332 ஆக இருந்த கொரோனா பாதிப்பு வியாழக்கிழமை 476 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக பரிசோதனையை அதிகரித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2500 பரிசோதனையில் இருந்து 5 ஆயிரமாக உயர்ந்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
