24 மணி நேரத்தில் 7.5 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பு; எங்கே? சாத்தனூர் அணையில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில்…
திருவண்ணாமலை
சாத்தனூர் அணையில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 24 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 மெகா வாட் மின்சாரம் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் உபரி நீர் செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. அதன்படி விநாடிக்கு 1500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதில், 1000 கன அடி நீர் அணையில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், 500 கன அடி நீர் தென்பெண்ணை ஆறு வழியாகவும் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சாத்தனூர் அணையில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையம் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு 24 மணி நேரத்தில் 7.5 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
அதேபோல, தொடர்ந்து ஒரு நாளைக்கு 7.2 மெகா வாட் முதல் 7.5 மெகா வாட் மின்சாரம் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் என்றும், இந்த மின்சாரம் திருவண்ணாமலை மாவட்ட பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும் நீர் மின் நிலைய அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.