Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 55 மலக்குழி மரணங்கள்: அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை

தமிழ்நாட்டில்‌ 2016 முதல் 2020 வரையான ஐந்து ஆண்டு காலத்தில் மலக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 55 பேர்‌ உயிரிழந்திருக்கின்றனர் என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

55 people died in Tamil Nadu during manual scavenging
Author
First Published Jan 8, 2023, 3:15 PM IST

சென்னை ஆஷா நிவாஸ் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, நிகழ்ச்சியில், ‘தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்’ என்ற ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைத் தருகிறது.

‌குப்பைகள்‌ அள்ளுவது, மலம்‌ அள்ளுவது, சாக்கடை அள்ளுவது, கழிவு நீர்‌ கால்வாயில்‌ அடைப்பு நீக்குவது, கழிவு நீர்‌ தொட்டி கழிவுகளை அகற்றுவது, உள்ளே இறங்கி கழிவுகளை அள்ளுவது போன்ற பணிகளைச் செய்யும்போது‌ மரணமடைவது தொடர்கதையாக நடந்துவருகிறது என்று அந்த அறிக்கை கவலை தெரிவிக்க்கிறது.

இந்தத் தூய்மைப் பணிகளை‌ தலித்‌ அருந்ததியர்‌ சமூகத்தினர்தான் ‌ செய்கின்றனர்‌. அவர்களிலும் 95 சதவீதம் பேர்  பெண்கள்‌. 2016-2020 வரையான ஐந்து ஆண்டுகளில் இத்தகைய கழிவு அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்ட 55 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.‌

அதிலும் 2022ஆம் ஆண்டில் எட்டே மாதங்களில் 15 பேர் இறந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தப் 12 மரணங்களும்கூட 2022ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரையான 7 மாதங்களுக்குள் நடந்தவை.

கழிவநீர் தொட்டிகள், மலக்குழிகள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகளோ, தொழில்நுட்ப வசதிகளோ தரப்படுவதில்லை. இது பல மரணங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களிலாவது இதுபோன்ற சுத்திகரிப்புப் பணிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி அரசு மரணங்களைத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. உள்ளூர் அரசு நிர்வாகமே இத்தகைய மரணங்களைத் தவிர்க்க வழிவகை செய்யலாம் என்று ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios