தீபாவளிக்காக... சென்னையை விட்டு ஊருக்குப் போனவங்க 5 லட்சம் பேராம்!
தீபாவளியை முன்னிட்டு, தங்கள் ஊர்களுக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 4.89 லட்சம் என்று கூறியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 89 ஆயிரம் பயணிகள் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வெளியூர்களுக்குச் சென்றுள்ளதாகக் கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 11, 645 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் இதுவரை 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது தெரியவந்ததும், இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் கவனத்துக்கு புகார் கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 8 மணி நிலவரப்படி 9 ஆயிரத்து 712 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது என்றார். அதிகக் கட்டணம் வசூலித்த புகாரின் பேரில், 16 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.