400kg gold jewellery recovery at chennai silks

தீ பிடித்து எரிந்து முற்றிலும் இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் இடிபாடுகளில் இருந் 400 கிலோ தங்க,வைர நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து புதைந்து கிடக்கும் நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை தியாகராயநகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மே 31-ந் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு தகுதியற்றது என்று கூறி அதை இடிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் 2-ந் தேதி இடிக்கும் பணி தொடங்கி 20-ந் தேதி கட்டிடம் முழுவதும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 6-வது தளத்தில் ஒரு லாக்கரும், தரை தளத்தில் 2 லாக்கரும் என மொத்தம் 3 லாக்கர்கள் இருந்தன. இதில் தரை தளத்தில் இருந்த 2 லாக்கர்களில் தான் கடையில் இருந்த வைரம், தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தரை தளத்தில் இருந்த லாக்கரை எடுக்கும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இடிபாடுகளில் இருந்து லாக்கரை அப்படியே வெளியே எடுக்க முடியாததால், லாக்கரில் இருந்த வைரம், தங்க நகை, மற்றும் வெள்ளியை வெளியே எடுத்தனர்.

பின்னர் தரை தளத்தில் இருந்த 2 லாக்கரில் ஒரு லாக்கர் திறக்கப்பட்டது. அதில் தங்க நகைகள் மட்டும் இருந்தன. இரும்பு பெட்டியை உள்ளே கொண்டு சென்று தங்க நகைகளை அதில் வைத்து ஊழியர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

அந்த தங்க நகைகளின் எடை 400 கிலோவுக்கு மேல் இருக்கும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

தரை தளத்தில் உள்ள மற்றொரு லாக்கரில் வைரம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளன. அவற்றை மீட்க இன்னும் 3 நாட்கள் ஆகும் என்றும், அதற்கான பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.