நாளை முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கியதுமே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களை வாட்டி எடுத்தது கனமழை.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கனமழை நின்றபிறகு சிறிதுசிறிதாக இயல்பு நிலை திரும்பியது.
சென்னையைவிட கடுமையான பாதிப்பை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சந்தித்தன. லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலை உள்ளது. கடந்த 3 தினங்களாக மழை இல்லாத நிலையில், தண்ணீர் சிறிதுசிறிதாக வடிந்துவருகிறது.
இந்நிலையில், நாளை(நவம்பர் 10) முதல் 4 நாட்களுக்கு(நவம்பர் 13 வரை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.