டெங்கு பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்; ராதாகிருஷ்ணன் தகவல்!
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அரசு பொதுமக்களுக்கு அறிவுரை அளித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பல்வேறு காய்ச்சலுக்காக இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் அப்போது கேட்டுக்கொண்டார்.