போராட்டம் நடத்த முயன்ற மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 330 பேரை அதிரடி கைது...
மதுரை
பணிநிரந்தரம் செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் செய்து போராட முயற்சித்ததால் மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் 330 பேரை காவலாளார்கள் கைது செய்தனர்.
"மின்வாரியத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்வது,
குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவது" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் சங்கத்தினர் மார்ச் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி மதுரை கோ.புதூரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம், தர்னா உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தலைமை அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள் 330 பேரை அதிரடியாக கைது செய்தனர்.