வாய்த்தகராறில் நிகழ்ந்த விபரீதம்... - விருத்தகிரீஸ்வரர் கோயில் காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது...
விருதாச்சலம் அருகே விருத்தகிரீஸ்வரர் கோயில் காவலாளி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில், விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த பாலு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருடன் அதேபகுதியை சேர்ந்த சங்கர் என்பவரும் காவலாளியாக இருந்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் 9.45 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அப்போது கோயிலில் கதவை பாலு பூட்டினார்.
அங்கு நின்று கொண்டிருந்த சங்கர், கோவிலில் யாரும் சரியாக வேலை பார்ப்பது இல்லை என்று கூறி திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சங்கர் தனது மகன், நண்பருடன் சேர்ந்து தாக்கியதில் பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளி சங்கர், மகன் சபரி, நண்பர் முத்து ஆகியோரை கைது செய்தனர்.