மாஜி எம்.எல்.ஏ.யின் மருமகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்! கட்டி முடிக்கப்படாத பாலத்தில் சென்றதால் கவிழ்ந்தது கார்!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் சென்ற கார் பாலத்தின் மேலிருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையின் மருமகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பழனி. இவரின் மனைவி நவனீதம், மகள் பவித்ரா, மருமகன் அய்யப்பன், காரில் செங்குன்றம் அருகே சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு நேரம் என்பதால், அங்கிருந்த அறிவிப்பு பலகையை பார்க்க வாய்ப்பின்றி கட்டி முடிக்கப்படாத பாலத்தில் வேகமாக சென்ற கார், பாலத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டசாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் பாதை மாறிச் செல்லக் கோரி அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு பலகையை பார்க்க வாய்ப்பின்றி வெளிவட்டச்சாலைப்பாலத்தின் மீது நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டே அதிபர் பழனி என்பவரின் குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர். பாலத்தில் கட்டுமானப்பணி நடைபெறுவதும், தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதும் தெரியாமல் வேகமாக சென்ற கார் பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பழனியின் மனைவி நவநீதம், மகள் பவித்ரா, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மருமகன் அய்யப்பன், கார் ஓட்டுநர் கதிர்வேல் ஆகியோர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பவித்ரா தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகையின் மருமகள் ஆவார். விபத்து குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கட்டுமான பணியில் உள்ள பாலங்கள் முன்பு தடுப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கட்டி முடிக்கப்படாத பாலங்களில் உரிய அறிவிப்பு பலகை, வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.