திரையரங்க வேலை நிறுத்தத்தால் 20 கோடி ரூபாய் இழப்பு - அபிராமி ராமநாதன் புலம்பல்!!
இன்று மாலைக்குள் திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி குறித்து ஒரு நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக திரையரங்குகளுக்கு 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தன் பங்கிற்கு 30% கேளிக்கை வரி விதிக்கப்படும் என அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 2.0 படத்தை 3டி யில் வெளியிடுவது குறித்து திரையரங்க உரிமையாளர்களுக்கு விளக்குவதற்கான கூட்டம் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி குறைப்பு குறித்து தொடர்ந்து அரசுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.
மேலும் இன்று மாலைக்குள் இப்பிரச்சனை தொடர்பாக ஒரு நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
தற்போது திரையரங்குகள் இயங்காததால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த 20 கோடி ரூபாய் எப்சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும்தான் என்றும் இதே பெரிய படங்களாக இருந்தால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்தார்..