2 நாட்களில் 19 விவசாயிகள் பலி - பயிர்கள் கருகியதால் வேதனை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணியாரம்பட்டியில் விவசாயி அழகர்சாமி என்பவர் இறந்தார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மனமுடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். விவசாயிகள் இறப்பை தடுக்க இது வரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசுக்கு சிறிதும் கவலையில்லை. நேற்று ஒரு நாள் மட்டும், பயிர்கள் கருகியதை பார்த்து விவசாயிகள் 10 பேர், மனமுடைந்து உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் 2 பேர், நடுசேத்தியை சேர்ந்த கோகுலவாசன், மேல்சேத்தி கணபதி ஆகியோரும் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
நகை மாவட்டம் கடம்பர வாழ்க்கை கிராமத்தில் பெண் விவசாயி சரோஜா உயிரிழந்தார். கோவில்பட்டியில் ஒரு விவசாயி உயிரிழந்தார். கமுதி பெரிய கையகம் கிராமத்தில் காளிமுத்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கருப்பையா என்ற விவசாயி ஆகியோர் இறந்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் விவசாயி ராஜ்குமார், நாகை மாவட்டம் ஓர்குடி கிராமத்தில் கலியபெருமாள் ஆகியோர் மரணமடைந்தனர். கருகிய பயிர்களை கண்ட விவசாயி கலியபெருமாள் அதிர்ச்சியில் வயலில் மயங்கி விழுந்து இறந்தார்.
நேற்று முதல் இன்று வரை தமிழகத்தில் 19 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தினத்திலும் விவசாயி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.