சென்னை வடபழனியில் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் பிரேம் ஆனந்த் வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 19 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் கொள்ளை : சென்னை வடபழனி ராகவன் காலனி பிரதான சாலையில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த், இவர் பிரபல திரைப்பட விநியோகஸ்தராக இருந்து வருகிறார் வயது மூப்பு காரணமாக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனது மகள் துர்கா வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக வீட்டை 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்கள் மட்டும் வந்து சுத்தம் செய்து விட்டு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்த பணியாளர்கள் வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

தங்க நகைகள், வெள்ளி கொள்ளை

இதனையடுத்து பிரேம் ஆனந்த் மகன் மகன் போஜராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் மும்பையிலிருந்து வடபழனியில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் உள்ள 40 சவரன் தங்க நகை மற்றும் 10 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுதுத போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

பல வாரங்களாக வீடு பூட்டப்பட்டிருந்ததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக சந்தேகப்பட்ட போலீசார், அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் சந்தோஷ் என்ற 19 வயது இளைஞரும் 17 வயதுடைய சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெள்ளி பொருட்களை மட்டும் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அந்த சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கும், மற்றொரு நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.