தமிழக மீனவர்களை 12 பேர் விடுதலை... ஆனால்... கிளிநொச்சி நீதிமன்றம் வைத்த டிவிஸ்ட்!!
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அவ்வப்போது மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களை விடுவிக்கக்கோரி அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்துவதும், தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதுமாக ஒவ்வொரு முறையும் கடந்து செல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
அந்தவகையில் கடந்த 12 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் 12 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் தமிழக மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து தமிழக மீனவர்கள் 12 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்கதையாகி வரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.