புழல் சிறையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 67 வயது ஆண் கைதிக்கு வினாத்தாளை வழங்கி தேர்வு தொடக்கம்...
திருவள்ளூர்
புழல் மத்திய சிறையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 63 வயது ஆண் கைதிக்கு வினாத்தாளை வழங்கி தொடங்கி வைத்தார் சிறைத்துறை துணைத் தலைவர். இந்த தேர்வை 50 சிறைக் கைதிகள் எழுதினர்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் சிறையில் வருடந்தோறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வையொட்டி, புழல் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
இதில், சிறைத்துறை துணைத் தலைவர் ஆ.முருகேசன் தலைமையில் தேர்வு மையத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வில் புழல் மத்திய சிறை 1-இல் இருந்து 22 கைதிகளும், சிறை 2-இல் இருந்து மூன்று கைதிகளும், புழல் மகளிர் சிறையில் இருந்து மூன்று கைதிகளும், வேலூர் சிறையில் இருந்து 19 கைதிகளும், வேலூர் மகளிர் சிறையில் இருந்து ஆறு கைதிகளும், கடலூர் சிறையில் இருந்து ஒரு கைதியும், சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்து இரண்டு கைதிகளும் என மொத்தம் 56 கைதிகள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 50 கைதிகள் தேர்வெழுதினர். இதில் 67 வயதான ஆண் கைதிக்கு சிறைத்துறை துணைத் தலைவர் வினாத்தாளை வழங்கி தேர்வைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தேர்வு தொடக்கத்தின்போது சிறைக் கண்காணிப்பாளர் சூசைமாணிக்கம் உடனிருந்தார்.