107 victims were severely injured in the sallikattu in Ariyalur.

அரியலூர்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரியலூரில் நடந்த சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 107 பேர் பலத்த காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் நேற்று சல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இதனையொட்டி நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது, மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் சேலம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 160-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசியது.

காளைகள் முட்டியதில் லால்குடியைச் சேர்ந்த சுந்தர் (27), சமயபுரத்தை சேர்ந்த சுபாஷ் (25), திருமானூரை சேர்ந்த சிவக்குமார் (35), கல்லக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ் (33), நடராஜன் (40) உள்பட 107 பேர் காயம் அடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களுக்கு பொய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டன.

சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில், வேட்டி, சேலை போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியைக் காண பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்றுப் போட்டியை கண்டு களித்தனர்.