ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100 பேர் கைது...
நாகப்பட்டினம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்" இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா (தலைஞாயிறு), வெங்கட்ராமன் (கீழையூர்), ஒன்றிய தலைவர்கள் சந்திரகுமார் (கீழ்வேளூர்), தமிழ்மாறன் (கீழையூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் காவலாளர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்" என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து கீழ்வேளூர் காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர். அவர்களை, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.