இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா  ஆகியோரை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2வது நபர் ஹரிப்பிரியா ஆகிய 2 ஆசிரியர்கள் வழக்கில் இருந்து நீக்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீமதியின் தாய் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி தரப்பில் பள்ளி விடுதி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க;- Srimathi Case: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! திடீர் ட்விஸ்ட்.. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 9 மாதம் விசாரணைக்கு பிறகு கடந்த 15ம் தேதி சிபிசிஐடி 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே, பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை. பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என்று சிபிசிஐடி தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க;- Srimathi Case: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்கள்..!

இந்நிலையில், நேற்று ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை தந்து தனது மகள் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையின் நகலை தனக்கு வழங்க கோரிக்கை விடுத்தார். ஆனால், சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி, நேரடியாக குற்றப்பத்திரிக்கை நகலை உங்களிடம் வழங்க தங்களுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தை நேரில் அணுகிடுமாறும் அறிவுறுத்தினார். 

இதனிடையே, ஸ்ரீமதி தாய் செல்வி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக வரும் 5-ம் தேதி எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் எனக்கு மனு அனுப்பியுள்ளது. 

குற்றப் பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும்? சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என ஸ்ரீமதி தாய் கண்ணீர் மல்க கூறினார்.