கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி 1,152 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி ஜூலை 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டம் திடீரென கலவரமாக வெடித்தது. அப்போது, பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. இதனால், பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் மாணவி ஸ்ரீமதியின் கொலைக்கான காரணம் எதுவும் இல்லை. தற்கொலைக்கான முகாந்திரமே உள்ளது. பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.